”2025-இல் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடக்கும்” என கொரோனாவைக் கணித்த லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து சில நாட்களே ஆகும் நிலையில், நடப்பாண்டில் நிகழப்போகும் சம்பவங்கள் பற்றி பலரும் தங்களது கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் (hypnotherapist) நிக்கோலஸ் அஜூலா (Nicholas Aujula) என்பவர், “இந்த ஆண்டில் மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக வரும்” என கணித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் உலகளாவிய பேரழிவு ஏற்படும் என்ற பாபா வங்காவின் அச்சுறுத்தும் கணிப்பு ஏற்கெனவே கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நிக்கோலஸ் அவுஜுலாவின் கணிப்பும் பேசுபொருளாகி உள்ளது. இவர், ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டு, ”கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்” எனக் கூறியிருந்தார். இதன்படி, 2019-ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம், டொனால்டு ட்ரம்பின் அதிபர் தேர்தல் வெற்றி, செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட தீ, ரோபோ படைகளின் வளர்ச்சி ஆகியவையும் அவருடைய கணிப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இதையடுத்தே, அவரது தற்போதைய கணிப்பும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் தற்போதைய கணிப்பில், ”மூன்றாம் உலகப் போர் 2025இல் நிகழும். இது இரக்கமே இல்லாத ஆண்டாக இருக்கும். மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள். அரசியல் படுகொலைகள் நடக்கும். தீமையும், வன்முறையும் இந்தப் பூமியைக் கைப்பற்றும்.
அதிக மழை, பேரழிவு தரும் வெள்ளம் இருக்கும். இதனால் லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடையும். கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும். பணவீக்கம் அதிகரிக்கும். பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும்” என அவர் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.